மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் அரசாங்க அதிபர் - கே.கருணாகரன் தலைமையில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகத்திற்கான திகதியை தீர்மானிப்பதனால் தமக்கான உள்ளீடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளின் முன்னெடுக்கப்படவுள்ள பெரும்போக செய்கை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை சிறுபோக செய்கையின்போது எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் சிறுபோக அறுவடையின்போது எதிர்நோக்கிய நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 

சிறுபோக செய்கையில் அறுவடைகள் நடைபெற்ற நிலையில் நெல்லை உரிய விலைக்கு சந்தைப்படுத்த முடியாமை குறித்தும் நெற்சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட நெல்லுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை குறித்தும் இதன்போது விவசாயிகளினால் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

கடந்த சிறுபோக நெற்செய்கையின்போது உள்ளீடுகள் அதிக விலைக்கு வாங்கி தாங்கள் நெற்செய்கைகளை முன்னெடுத்த நிலையில் அறுவடையின்போது நெல்லின் விலைகள் குறைந்தளவில் தீர்மானிக்கப்பட்டதாகவும் விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதன் காரணமாகவும் தமது நெல்லுக்கான விலைகள் குறைவடைந்ததாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பெரும்போக நெற்செய்கை முன்னெடுப்பதனால் எரிபொருட்கள், விதை, யூரியா பசளை போன்ற உள்ளீடுகளை விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் திகதிக்கு வழங்குவதற்கு உறுதியளிக்கும் பட்சத்திலேயே தாங்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாகவும் அவ்வாறு இல்லாவிட்டால் இம்முறை நெற்செய்கையை முன்னெடுக்கப்போவதில்லையெனவும் இங்கு விவசாயிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கைகளை விவசாய அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு உரிய உள்ளீடுகள் பெற்றுக்கொடுக்கப்படும் அதேவேளை எரிபொருள் தொடர்பான விபரங்கள் அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவையும் உரிய நேரத்தில் கிடைக்கும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள நீர்பாசன திணைக்களத்தின் மத்திய, மாகாண பணிப்பாளர்கள், விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,பிரதேச செயலாளர்கள்,வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

புதியது பழையவை