யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அடையாள உண்ணாவிரதம் இன்று (25)காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
தியாக தீபத்தின் நினைவேந்தல் தமிழர் தாயகம் உள்ளிட்ட தரணியெங்கும் நடைபெற்று வரும் நிலையில், நாளை (26)திங்கட்கிழமை இறுதி நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதேவேளை, நாளை திங்கட்கிழமை பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் நல்லூருக்குப் பவனி வர இருக்கின்றன.
அனைத்து ஊர்திகளும் காலை 10 மணிக்கு முன்பதாக நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தியாக தீபம் திலீபன் உயிர் பிரிந்த காலை 10.48 மணிக்கு மலரஞ்சலி இடம்பெறவுள்ளது.
இதன்போது மக்கள் பெரும் எழுச்சியாக வரவேண்டும். வாகன ஊர்திகள், தூக்குக் காவடிகளை எங்கள் உறவுகள் காலையில் இருந்து அவற்றை கொண்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தியாக தீபம் திலீபன் பிறந்த ஊரெழுவிலிருந்து ஊர்தி நல்லூர் நினைவாலயத்தை நோக்கி வந்தடைய இருக்கின்றது. இந்த ஊர்திகளுடன் இணைந்து பயணித்துக் கொண்டு பொதுமக்கள் வரவேண்டும்" என்று நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.