கிழக்கு மாகாண தமிழ் மொழித் தினப்போட்டி மட்டக்களப்பில்

ஒரு மொழியை தாயாக நினைத்து வழிபடும் மொழியாக தமிழ் மொழி மட்டுமே பெருமைகொள்வதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழி தின போட்டியின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று (02) திகதி இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திருமதி.குலேந்திரகுமார் சுஜாதாவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்விப்பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், நடுவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

தமிழ் பண்பாட்டு கலாசார வாத்தியங்கள் இசைத்து வரவேற்பு நடனங்களுடன் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இறைவணக்கம், தமிழ்மொழி வாழ்த்து, தமிழ் மொழி தின கீதம் என்பன இசைக்கப்பட்டதையடுத்து மாணவர்களின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து தமிழ் மொழி தினப் போட்டி நடுவர்களுக்கான அறிவுறுத்தலின் பின்னர் போட்டிகள் ஆரம்பமாகின.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் 325மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியதுடன் 65நடுவர்கள் போட்டிகளுக்கு நடுவனம் வகித்தனர்.

இக் கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழி தின போட்டியில் கோட்ட மட்டங்களில் வெற்றிபெற்று, மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டதுடன், இதில் நாட்டுக்கூத்தி (வடமோடி, தென்மோடி), இலக்கிய நாடகம்,
பேச்சு, கவிதை பாவோதல் மற்றும் தனி நடன போட்டிகள் உட்பட 22போட்டிகள் நடைபெற்றன.

அதே வேளை இம் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியீட்டும் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் எதிர்வரும் நவெம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளின் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் போட்டிகளில் கலந்துகொண்டவர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினரால் தாகசாந்தியும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆலயத்தின் வண்ணக்கர்மார்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்,
இந்தியாவின் காரைக்குடியில் தமிழ் அன்னைக்கு ஆலயம் அமைத்து வழிபடுகின்றார்கள்.மொழிக்கு ஆலயம் அமைத்து வழிபடும் பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ளது.தமிழ் மொழியை தவிர வேறெந்த மொழிக்கும் அந்த பெருமையில்லை.அதுமட்டுமன்றி தாய்மை என்பது அனைவருக்கும் முதன்மையானது.அந்த தாய்மையினை குறிக்கும் முதல் எழுத்தை தமிழ் மொழி முதல் எழுத்தாக கொண்டு பெருமைகொண்டுள்ளது.

1997ஆம் ஆண்டு நடைபெற்ற கூகுல் கணக்கெடுப்பின் அடிப்படையில் 72பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாக இருப்பதுடன் உலக மொழிகளில் 14வது இடத்தினையும் தமிழ் மொழிபெற்றிருப்பது தமிழ் மொழியை பேசும் எங்களை பெருமையடையச்செய்கின்றது.
புதியது பழையவை