தமிழர் பகுதி கூண்டோடு பறிபோகும் அபாயம்

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை சுவீகரிக்கமாறு எழுத்துமூலம் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை காணி அமைச்சின் மேலதிக செயலாளர் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ரேணுகாவினால் தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு சிங்கள மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசம் உள்ள மக்களுக்குச் சொந்தமான நிலங்களை முழுமையாகச் சுவீகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காணி அமைச்சின் மேலதிக செயலாளர் ரேணுகா எழுத்து மூலம் உத்தரவிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்குப் பகுதியில் தற்போதும் 2 ஆயிரத்து 467 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளது. இதில் இராணுவத்துக்கு ஆயிரத்து 614 ஏக்கரையும் அளவீடு செய்யுமாறு 2022.09.23 அன்று தெல்லிப்பளை பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை வலிகாமம் வடக்கில் மீனவர்களின் நிலம் 212 ஏக்கரும், பலாலி வீதிக்கு கிழக்கே உள்ள 612 ஏக்கரும் விடுவிக்கப்படும் என நீண்ட காலமாகத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூண்டோடு இராணுவ மயமாக்கலிற்கு முயற்சிக்கப்படுகின்றது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வலிகாமம் வடக்கில் படையினர் நிலைகொண்டுள்ள நிலங்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த நடவடிக்கைக்கு கொழும்பு காய்நகர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை