ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வடக்கு வாழ் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கவென்று தமிழ் அரசியல் கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு ஈழத்தமிழர்களின் நம்பிக்கையில் மீண்டுமோர் இடியாக விழுந்திருப்பதைத் தமிழ் அரசியல் தலைவர்கள் யாரும் உணர்ந்து கொண்டதாய் தெரியவில்லை என ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ரணிலின் அறிவிப்பில் உள்ள ஆபத்தையும் கபட நோக்கத்தையும் அவர்கள் புரிந்து கொண்டதாகவும் தெரியவில்லை.
வடக்கு, கிழக்கு இணைந்த தமிழீழத் தாயகப் பகுதியில் கடந்த காலங்களில் தமிழர்கள் பல அளவிட முடியாத இன்னல்களையும், நெருக்கடிகளையும், போராட்டங்களையும் அனுபவித்து வந்துள்ளனர்.
சிங்கள பௌத்த இனவெறியர்களால், அதன் படைகளால் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுக் காணாமலாக்கப்பட்டு நிலம் சொத்துக்களை இழந்தார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.