மட்டக்களப்பு - கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (27-11-2022) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் முறக்கொட்டன்சேனை தேவாபுரப்பகுதியைச் சேர்ந்த நல்லராசா நேசராசா (வயது 46) ஆறு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
முறக்கொட்டான்சேனை பகுதியில் இருந்து கிரான் நாகவத்தை கடற்கரைப் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக ஐவர் உழவு இயந்திரத்தில் சென்ற நிலையில் பிரதான வீதியில் இருந்து குறுக்கு வீதிக்கு உழவு இயந்திரத்தை திருப்பும் போது பின்னால் வந்த கார் உழவு இயந்திரத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது, உளவு இயந்திரத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கார் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தில் இருந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
காரில் வந்தவர்கள் களுதாவளை ஆலயத்திற்கு பூஜை ஒன்றுக்கு வந்துள்ளார்கள் என தெரியவருகிறது.
காரின் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய இருவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்த சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பரிசோதனையின் பின்னர் உறவினர்கள் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.