2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீது இன்று இறுதி வாக்கெடுப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (08.12.2022) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றின் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

அதன் பிரகாரம் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15ஆம் திகதி திதல் 22ஆம் திகதி வரையிலான 7 நாட்கள் இடம்பெற்றன.

22ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 121 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.

வாக்களிப்பு
இதில் அரசாங்கத்துடன் இணைந்து எதிரணியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரும், எதிரணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திஸாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன, ஜோன் செவிரத்ன ஆகியோரும் வாக்களித்தனர்.

வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி.), கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினர், விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் வாக்களித்தனர்.

அதேவேளை, எதிரணியில் உள்ள ஏ.எல்.எம்.அதாவுல்லா, அலி சப்ரி ரஹீம் ஆகியோரும் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை. எனினும், தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் இருந்த போதும் வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொண்டார்.
புதியது பழையவை