பெண்களுக்காக அரசியலில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 25வீத ஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சிமன்ற பெண்களினால் மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டமும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாட்டில் 16நாள் செயற்பாட்டு வாரத்தினை முன்னிட்டு இப்போராட்டம் இன்று (07.12.2022) மட்டக்களப்பு காந்திபூங்காவில் இடம்பெற்றுள்ளது.
பெண்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தவும் என்னும் தலைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான 25சதவீத ஒதுக்கீடு
பெண்களுக்கான 25வீத ஒதுக்கீடு கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ளாத காரணத்தினால் பெண்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையே காணப்படுவதாகவும் அதனை உறுதிப்படுத்துமாறும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது ஜனாதிபதி,பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பனவற்றுக்கு மனுக்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பெண்கள் உரிமையினை வலியுறுத்தும் வகையில் கலந்துகொண்ட அனைத்து பெண்களும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டுள்ளனர்.