காணி அபகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் மகாவலி "பி" வலயத்தின் வலது கரை காணிகளை மகாவலி திட்டத்தின் பெயரால் அபகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கிரான் புலிபாய்ந்தகல் பிரதான வீதியை மறித்து நேற்று (05.12.2022) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

காணி அபகரிப்பு
இதற்கமைய எமது பூர்வீக காணிகளை கையகப்படுத்தும் நோக்கத்தினை மகாவலியே விட்டுவிடு, காணி அபகரிப்பினை உடன் நிறுத்து, காணி அபகரிப்பு என்னும் பெயரில் தமிழ் பேசும் பூர்வீக மக்களின் வாழ்விடங்களை அபகரிக்கும் சதித்திட்டத்தினை நிறுத்து, சிறுபான்மை இனங்களும் இந்த நாட்டின் இனங்களே, கிழக்கு மாகாண காணிகளை பறிப்பதன் நோக்கம் என்ன என்ற வாசகங்களை அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மகாவலி திட்டத்தின் கீழ் தற்போது காணிகளை அளக்கும் செயற்பாடுகளை உடன் நிறுத்தவேண்டும் என்பதுடன் அக்காணிகளை வேறு இனங்கள் அபகரிப்பதை அனுமதிக்கமாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவிர்த்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

சோளம் பயிர்ச்செய்கை என்ற நோக்கில் மகாவலி வலயம் என்ற கருப்பொருளைக்கொண்டு வந்து தமிழ் பேசும் மக்களின் காணிகளை அபகரித்து பெரும்பான்மையினத்தை குடியமர்த்துவதற்கான திட்டமிட்ட சதி நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தினை அம்பாறை மாவட்டமாக பிரித்து காணிகளை அபகரித்ததுபோன்று இன்று அரசாங்கம் மட்டக்களப்பில் திட்டமிட்ட குடியேற்றத்தினை முன்னெடுத்து இனவிகிதாசாரத்தை மாற்றும் செயற்றிட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.

எழுவான் கரையில் சுற்றுலாதுறை அபிவிருத்தி என்ற பெயரிலும் படுவான்கரையில் மகாவலி திட்டம் என்னும் பெயரிலும் காணி அபகரிப்பினை மேற்கொண்டு பெரும்பான்மையினத்தை குடியேற்ற திட்டமிட்ட நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளனர்.

மகாவலி உத்தியோகத்தர்களி சந்திக்க ஏற்பாடு
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் காணி அளக்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 12ஆம் திகதி மகாவலி உத்தியோகத்தர்களுடன் மாவட்ட விவசாயிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை