நாடாளுமன்ற உறுப்பினர்கள் 208 பேரினது கல்வி தகைமை தொடர்பான விபரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதனை பொதுமக்கள் அணுக முடியும் என்பதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கல்வி தகைமையில் பின்தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள 208 உறுப்பினர்கள் தமது கல்வி மற்றும் தொழில் தகைமைகளை நாடாளுமன்ற செயலகத்திற்கு அறிவித்துள்ளனர்.
எனினும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தகவல்களை நாடாளுமன்ற செயலகத்திடம் ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவின் பிரகாரம், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்களை www.parliament.lk என்ற நாடாளுமன்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், நோகராதலிங்கம், மற்றும் சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான் ஆகியோர், உயர்தரம் வரை பயின்றுள்ளதுடன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஐ.சி.எம்.ஏ இல் நான்காம் தரத்தை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவராசா கலையரசன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை பயிற்றுள்ளதாக நாடாளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் தீலிபன், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரின் கல்வித் தகைமைகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை கல்வி கற்றுள்ளதுடன், வணிகராக தம்மை அடையாளப்படுத்தியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வான எம்.எஸ்.தௌபீக் உயர்தரம் வரை கல்வி கற்றுள்ளார்.
மனோ கணேசன், உயர்தரத்திற்கு மேலதிகமாக டிப்ளோமா கற்கையை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற இணைத்தளம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான பழனி திகாரம்பரம் இரண்டாம் நிலை கல்வியை பூர்த்தி செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தொழில்நுட்பத்தில் தேசிய டிப்ளோமைவை பெற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.