முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக் ஆண்டகை கடந்த 31 ஆம் திகதி தனது 95ஆவது வயதில் அவர் இயற்கை எய்தியிருந்தார்.
இதற்கமைய திருத்தந்தையின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது.
எனவே திருதந்தையின் மறைவுக்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் நாளை (05.01.2023) தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவிக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
திருத்தந்தை 16ஆம் பெனடிக் ஆண்டகை
முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப்பின், போப்பாக பதவியேற்றவர் 16-ம் பெனடிக்ட். இவரது உண்மையான பெயர் ஜோசப் ரேட்சிங்கர். ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் கடந்த 1927-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் திகதி பிறந்தார்.
ஜெர்மனி ராணுவத்தில் பணியாற்றிய இவர் கடந்த 1945-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து வெளியேறினார்.
அதன்பின் இவர், ஜெர்மனியில் இறையியல் பாடம் கற்பித்தார். கடந்த 1977-ம் ஆண்டு இவர் முனிச் நகரின் பிஷப்பாக நியமிக்கப்பட்டார். அடுத்த 3 மாதத்தில் இவரை கார்டினலாக பாப்பரசர் 6-ம் பால் நியமித்தார்.
முன்னாள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மறைவுக்குப் பின் இவர் கடந்த 2005-ம் ஆண்டு போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவரது 8 ஆண்டு பதவிக்காலத்தில் பல சவால்களை சந்தித்தார்.
பாதிரியார்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட போது, அந்த தவறுகளுக்காக இவர் மன்னிப்பு கேட்டார். ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த 16-ம் பெனடிக்ட் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்தார்.
தவறு செய்தவர்கள் மீது இவர் நடவடிக்கை எடுக்காததால், இவரது தலைமை குறித்தும் அப்போது விமர்சிக்கப்பட்டது.