"அரசு ஆரம்பித்துள்ள தீர்வுக்கான பேச்சு நல்லபடியாக நிறைவேறவேண்டும் என இந்தப் புத்தாண்டில் கடவுளை நான் பிரார்த்திக்கின்றேன்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமது புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,
"பிறக்கின்ற புத்தாண்டு தமிழ் மக்களுக்கு தீர்க்கரமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டு. தமிழர் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
அதற்கான பேச்சும் ஜனாதிபதி ரணிலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாம் விரும்பும் திருப்திகரமான தீர்வை இந்த அரசு முன்வைக்காவிடின் அந்தத் தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
எனவே, தமிழர்களின் கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு அரசியல் தீர்வை விரைந்து இந்த அரசு காணவேண்டும்.
இல்லையேல் நாம் தீர்க்கரமான முடிவுகளை எடுப்போம். எம் பக்கம் இருக்கின்ற சர்வதேச நாடுகளுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்" என்றார்.