தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் - தவறின் தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை



தமிழ் மக்களுக்கான நிரந்தரமான சமஷ்டி முறையிலான அரசில் தீர்வை காண்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டுமெனவும் தவறின் தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என மட்டக்களப்பில்  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை (10-01-2023)  முற்பகல் 10 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடக்கு,கிழக்கில் 8 மாவட்டங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுமாறு வலியுறுத்தி கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் இன்று 10 ஆம் திகதிவரை தொடர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாகவே இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணையுமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை