வெட்டி துண்டாக்கப்பட்ட யுவதியின் கை - பல மணிநேர போராட்டத்தில் வைத்தியர்களுக்கு கிடைத்த வெற்றி



கேகாலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழுவினர் உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக இணைத்து சாதனை படைத்துள்ளனர்.

வைத்தியசாலையின் நிபுணத்துவ சத்திரசிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்தன உள்ளிட்ட வைத்திய குழுவினர், இவ்வாறு கையை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.

கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலபால, நீலபாலகம்மன பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 21 வயதுடைய திருமணமாகாத யுவதியின் கை குடும்ப தகராறு காரணமாக கை முழங்கைக்குக் கீழே வெட்டப்பட்டு கை தரையில் விழுந்துள்ளது.


யுவதியின் உடல்நிலை
இதன்போது உடனடியாக துண்டிக்கப்பட்ட கையை ஐஸ் கட்டிகளுடன் பொலித்தீன் பையில் சுற்றிவாறு, காயமடைந்த பெண்ணை உடனடியாக அயலவர்கள் கேகாலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


இதன்போது கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஆனந்த ஜயவர்தன உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவினர் நேற்று (05) இரவு 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை சத்திரசிகிச்சை மேற்கொண்டு கையை வெற்றிகரமாக இணைத்துள்ளனர்.

சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதியது பழையவை