மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டிகள்!



அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டின் எழுச்சி நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் சிறப்பாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் அன்னை பூபதி நினைவேந்தல் கட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னையின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

கடந்த (15.04.2023) திகதி அன்னையின் சொந்த ஊரான கிரான் பகுதியில் ஆண்களுக்கான மென் பந்து துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வுகளை அன்னை நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் சார்பாக சபா.சிவயோகநாதன் மற்றும் .செல்வகுமார் ஆகியோர் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

சிறப்பு அதிதிகளின் பங்களிப்பு
இதில் 14 துடுப்பாட்டு அணிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியின் ஆரம்ப நிகழ்வில், சமூக ஆர்வலர்கள், தேசப்பற்றாளர்கள் மற்றும் விளையாட்டு துறை அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதேவேளை (17.04.2023) ஆம் திகதி அன்னையின் நினைவு சுமந்து கரப்பந்தாட்ட போட்டி ஆரம்ப நிகழ்வின் போது தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் மகளார் சாந்தி அவர்களும் அன்னை பூபதி நினைவேந்தல் கட்டமைப்பின் உறுப்பினர் சபா.சிவயோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்து சிறப்பித்தனர்.


மேலும் (18.04.2023) ஆம் திகதி சிறப்பு விளையாட்டு நிகழ்வாக கபடி போட்டிகள் கிரான் பகுதியில் நடைபெற்றது. இதிலும் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விளையாட்டுப் போட்டிகளின் இறுதிச்சுற்று நடைபெற்று, பரிசளிப்பு நிகழ்வு அன்னை பூபதி அவர்களின் நினைவு நாளான இன்று(19.04.2023) நாவலடியில் அன்னை பூபதி அவர்களின் கல்லறை அமைந்துள்ள பகுதியில் நடைபெறும், என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



புதியது பழையவை