மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு!



மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகநேரில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுற்றுலா விடுதி வாகநேரியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான க.ஜெயந்தன் வயது (24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாடு கட்டும் தொழிலுக்கு வழக்கம் போல் நேற்று மாலை (03-05-2023) சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வீட்டில் அருகாமையில் நின்ற யானையே இவரை தாக்கியுள்ளது. தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற வாழைச்சேனை பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மரண விசாரணை அதிகாரி வ.இரமேஸ்ஆனந்தன் ஆகியோர்கள் சடலத்தை பார்வையிட்டனர்.

இதன்போது காட்டு யானையின் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்து பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் கடந்த 3 நாட்களுக்கு முன்பும் வீதியால் சென்ற நபர் ஒருவரை துரத்தி துரத்தி தாக்கியதாகவும் அதிஸ்டவசமாக அவர் யானையின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே யானை வேலி அமைத்து பாதுகாப்பு பெற நடவடிக்கை எடுத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொதுமக்கள் கேட்கின்றனர்.
புதியது பழையவை