நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தின் முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான போது பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் வருகை தந்து அம் மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா பாரதிபுரத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முட்பட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் பெயர் விபரம் வராதவர்களிள் முறைப்பாட்டு கடிதங்களை எழுதி பிரதேச செயலாளரிடம் கையளிப்பதுடன் தன்னிடமும் பிரதியொன்றை தருமாறு தெரிவித்தார்.