மீன் பிடி படகு நடுக்கடலில் விபத்து - ஒருவர் தீக்காயங்களுடன் மீட்பு



காலியிலிருந்து இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டுப் படகு ஒன்றும் “சசிந்த புதா” என்ற நெடுநாள் படகும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

விபத்துக் குறித்து மேலும் தெரிய வருகையில், நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஐந்து கடற்றொழிலாளர்களுடன் “சசிந்த புதா” என்ற நெடுநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றுள்ளது.

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டு படகு ஒன்றும் குறித்த நெடுநாள் படகும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது அந்த வெளிநாட்டு படகில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் நெடுநாள் படகில் இருந்த கடற்றொழிலாளர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைக்கு அறிவித்துள்ளது.


இதன்படி, கடற்படையின் “ஸ்பார் மிரா” என்ற கப்பல் ஊடாக தீக்காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.


குறித்த கடற்றொழிலாளர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை