மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மையில் மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சினை தொடர்பாகவும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது வீதிப்போக்குவரத்து அனுமதிப் பத்திரம் இன்றி 10 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் பின் அரசியல் பின்னணி இருப்பதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
ஆகவே, இன்றைய (17-07-2023) ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட விரோதமான முறையில் இயங்கி வரும் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரியின் அசமந்த செயற்பாட்டின் காரணமாக இன்று 11 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உள்நுழைந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் சாணக்கியனை தாக்குவதற்கு முற்பட்டதன் காரணமாக போராட்டக்காரர்களால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் இருவர் நையப்புடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒழுங்கான முறையில் அனுமதிப் பத்திரங்கள் இன்றி பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற காரணத்தினால், குறுந்தூர பேருந்து சாரதிகளுக்கும் நெடுந்தூர பேருந்து சாரதிகளுக்கு இடையில் போட்டித்தன்மை காரணமாகவே இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.