காவல்துறை தடுப்பில் இருந்த இளைஞன் உயிரிழப்பு!



திருகோணமலை ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் காவல்துறைதடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (23 -08-2023) மாலை 4.50 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை- ஜமாலியா, தக்வா நகரை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவருகின்றது.

ஜமாலியா- கடற்கரை பகுதியில் கடந்த 21ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பணத்தை திருடியதாக இவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபரை 22 ஆம் திகதி மாலை தலைமையக காவல்துறையினர் அழைத்துச் சென்று தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபரான இளைஞர் நேற்று (23) மாலை தலைமையக காவல் நிலைய தடுப்புக் காவலில் இருக்கின்ற மலசல கூடத்திற்குள் தான் அணிந்திருந்த ஆடையைக் கிழித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


இதேநேரம் உயிரிழந்த சந்தேக நபர் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நபரை சிலர் தாக்கி உள்ளதாகவும் தெரிய வருகிறது. இத்தாக்குதலினால் ஜமாலியா- லவ்லேன் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த மரணம் தொடர்பில் திருகோணமலை- தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் கைது செய்யப்பட்ட இளைஞரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் தடுப்பு காவலில் வைத்திருந்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு மரணத்திற்காக நீதியை பெற்றுத் தருமாறு உயிரிழந்தவரின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

புதியது பழையவை