இந்த சிங்கள தேசத்தின் அடக்கு முறைக்கு எதிராக தான் ஆயுத போராட்டம் தொடங்கியது, இந்த அடக்குமுறை நெருக்குதல்களை கொடுக்கின்ற போது அடக்கு முறைக்கு எதிராக மக்கள் வீறு கொண்டு எழுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் காரியாலயத்தில் நேற்று (26.11.2023) ரெலோ கட்சியின் 11 தேசிய மாநாடு பற்றிய கட்சி உறுப்பினர்களுக்கிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதற்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இந்த அடக்குமுறை தொடர்ச்சியாக இருந்து வருகின்றது, இப்போது எங்களுடைய மக்கள் பட்டினிசாவை எதிர் நோக்கியுள்ள சூழலிலே இப்போது நடைபெறுகின்ற நிலங்களுக்கான முரண்பாடாக இருக்கட்டும் இப்படி ஒட்டுமொத்த பல திணைக்களங்களை வைத்துக் கொண்டு எங்களுடைய தேசத்தில் பௌத்த விகாரைகளை கட்டுவதும் பறவைகள் சரணாலயம் அமைக்க நிலங்களை அபகரிப்பதும் அதிகளவில் இடம்பெறுகிறது.
தென்னிலங்கையில் இருந்து எங்கள் பகுதியிலுள்ள கடலிலே வருகின்ற கடற்றொழிலாளர்கள் சட்டத்துக்கு புறம்பான வலைகளை கொண்டுவந்து மிக மோசமான செயல்பாடுகளை செய்துவருகின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு விடையத்திலும் எங்களுடைய பிரதேசம் பறி போகின்றது. அத்துடன் நகுலேஸ் கைது செய்யப்பட்டார்.
அவர் செய்த தவறு மாவீரர் பெற்றோரை கௌரவித்தமையாகும், பயங்கரவாத தடைச்சட்டத்தில் அவரை கைது செய்தமை ஏற்று கொள்ள முடியாது. இதனை கண்டிக்கின்றோம்.
அந்த அடிப்படையில் இன்று நடைபெறுகின்ற மாவீரர் தின நினைவேந்தல் பயங்கரவாத தடைச்சட்டத்தில் அடக்க நினைக்கின்றனர்.
நாங்கள் இதை எதிர்பார்க்கவேண்டும். ஆனால் பின்நோக்கி போக முடியாது. மக்கள் கிழந்தெழுவார்கள். அதற்கான ஆதரவு செயற்பாட்டை நாங்கள் செய்வோம்.
போர் முடிந்துவிட்டது சகல விடையங்களை செய்யமுடியும் என எதிர்பார்க்கமுடியாது. துப்பாக்கி சத்தங்கள் இல்லையே ஒழிய அதேபோல் சூழலில் மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.
ஆகவே இதனை எதிர்பார்த்து எதிர்த்து செயற்படுகின்ற மண்ணுக்காக உயிர் தியாகம் செய்கின்ற அத்தனைபேருக்கும் நாங்கள் செய்கின்ற கைமாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதேயாகும். ஆகவே இந்த விடயத்தில் நாங்கள் பின்னோக்கி போக முடியாது” என தெரிவித்துள்ளார்.