வடக்கு - கிழக்கில் உருவாகும் தாழமுக்கம்



வங்காள விரிகுடாவில் எதிர்வரும் (27.11.2023) அன்று அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.

இது எதிர்வரும் (29.11.2023) அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வானிலை மாற்றம் தொடர்பில் சற்றுமுன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், எதிர்வரும் (27.11.2023) முதல் (03.12.2023) வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழைவீழ்ச்சி கிடைக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு நிலை 
தற்போதைய மாதிரிகளின் கணிப்பின் படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களூடாக நகரும் வாய்ப்புக்கள் அதிகாமாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார். 

அத்துடன், இது உருவாகும் காலப்பகுதியில் நிலவும் வளிமண்டல வெப்பநிலை, சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை, காற்றழுத்த தாழ்வு நிலையின் அமுக்க சாய்வுத் தன்மை மற்றும் தாழ்வு நிலைக்கு கிடைக்கும் மறைவெப்ப சக்தி என்பவற்றை பொறுத்து நகரும் திசை மாற்றமடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட காரணிகள் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் இருந்து புயலாக வலுப்பெறும் சாத்தியக்கூறுகளை உருவாக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை