மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்



மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (04.12.2023) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி கிரான் பிரதேசத்திலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடத்தினை அலங்கரித்த கொடிகள், கம்பங்கள், மின்பிறப்பாக்கி மற்றும் ஒலி பெருக்கி என்பவற்றை கழற்றி வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு திரும்பினர்.

இதன் போது மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டாளரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான நிதர்சன் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி காஞ்சிநிதி, ஒலி பெருக்கி உரிமையாளரான பிரான்சிஸ் அன்ரனி நியூட்டன், அவரது மகனான 19 வயதுடைய நியூட்டன் சதுர்சன், வாகனசாரதியான 33 வயதுடைய சண்முகநாதன் நவஜீவன் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிபரப்பு செய்தமை, பெயர் பொறித்த பதாகை வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டத்தில் வாழைச்சேனை பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் நவம்பர் மாதம் 28ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை டிசம்பர் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டது.


இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (04.12.2023) கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புதியது பழையவை