கல்முனை நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் - மேற்பார்வையாளரான பெண் கைது!



சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் இருந்த சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனே இவ்வாறு உயிரந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.


குறித்த மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

திருடிய குற்றச்சாட்டில்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையின் மணியைத் திருடிய குற்றச்சாட்டில் கொக்குவில் காவல்துறையினரால் கடந்த மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன் நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின்படி குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 29 ஆம் திகதி அதிகாலை 3.30 மணிஅளவில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்ததை அடுத்து சிறுவனின் உடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்ட அறிக்கையில் இந்த மரணம் உடலில் காணப்படுகின்ற காயங்களினால் ஏற்பட்டிருப்பதாகவும், இந்த காயம் அடித்ததனால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொய்க் குற்றச்சாட்டுகள்
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுப்பதற்காக குறித்த பாடசாலைக்கு சென்றுள்ளனர்.

அங்கு நடத்திய விசாரணைகளில் இருந்து சிறுவனை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் 25 வயது மதிக்கத்தக்க அந்தப் பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைதான அவர் நேற்றைய தினம் (02-12-2023) இரவு கல்முனை தலைமையக காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

சம்பவம் நடந்த நாளன்று இரவு உணவினை உட்கொண்ட பின்னர் அந்தச் சிறுவன் பாடசாலை வளாகத்தில் நின்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை எனவும் முன்னுக்குப் பின்னான வாக்குமூலங்கள் வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் பாடசாலை மேற்பார்வையாளரான குறித்த பெண் காவல்த்துறையினரால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

சிறுவனின் மரணத்தில் பலவிதமான பொய்க் குற்றச்சாட்டுகளை பாடசாலை நிர்வாகம் முன் வைப்பதனால் நீதியானதொரு விசாரணையினை நடந்த வேண்டும் என அந்த சிறுவனின் தந்தை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை