மரத்தை வெட்டிமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு!




மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாமா ஜும்மா பள்ளிவாயல் முன்றலில் நின்ற 350 வருடங்கள் பழைமையான வாகை மரத்தை சட்டத்திற்கு முரணாக வெட்டியமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் மனுதாரர்கள் குறிப்பிட்ட மரம், வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் மட்டக்களப்பின் ஒரு அடையாளமாக இருந்தது என்றும் குறிப்பிட்ட மரம் சூழலுக்கு பயன்மிக்கதாக காணப்பட்டது எனவும் அதனை பலாத்காரமாக வெட்டியமையினால் பிரதிவாதிகள்  தங்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். 


இந்த மரத்தில் பல நூற்றுக்கணக்கான பறவைகள் வசித்து வந்தன என்றும் மரம் வெட்டப்பட்டவுடன் கூடுகளை இழந்துள்ளன எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் நிற்கும் வாகை மரத்தினை பள்ளிவாயலின் அனுமதியின்றி மட்டக்களப்பு பிராந்திய இலங்கை மரக்கூட்டுத்தாபனத்தில் ஊழியர்கள், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியோரின் ஆதரவோடு சட்டத்திற்கு முரணாக வெட்டி வீழ்த்தியுள்ளனர் என மனுதாரர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வழக்கின் பிரதிவாதிகளாக இலங்கை மரக்கூட்டுத்தாபனம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஜாமியுஸ்ஸலாமா ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகிகள் ஆகியோர்களின் பெயரிடப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி ஜா.றாஸி முஹம்மத் ஆகியோருடன் அறிவுறுத்தல் சட்டத்தரணியாக றுடானி ஸாஹிர் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். 

குறிப்பிட்ட வழக்கை ஆதரிப்பிற்காக எதிர்வரும் மே மாதம் 21 திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை