மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்




மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டமானது இன்று (02.02.2024) பி.ப 2.00 மணிக்கு போரதீவுப்பற்று பிரதேசசெயலக  கலாசார மண்டபத்தில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தலைமையில் ஆரம்பமாகியது. 

பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், பாராளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்ததுடன் போரதீவுப்பற்று பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பகாரி,  சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும்  போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன. மேலும் பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டன.


புதியது பழையவை