மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் காட்டு யானைகளின் அட்டகாசம்




மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி, மண்டூர் பகுதிக்கு காட்டு யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்ததால் அந்த பகுதியிலுள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (17-02-2024) மாலை இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில் பிரதேச செயலாளரின் தலைமையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பொதுமக்கள் என பலரும் ஒன்றிணைந்து காட்டு யானை கூட்டத்தை விரட்ட பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.


பற்றைக் காடுகள்
இருப்பினும், வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் யானை வெடிகள் வைத்து மிக நீண்ட நேர போராட்டத்திற்கு பின் குறித்த பகுதியிலிருந்து காட்டு யானைக் கூட்டத்தை விரட்டியுள்ளனர்.


எனினும் அந்த பகுதியிலுள்ள கிராமங்களை அண்மித்துள்ள பற்றைக் காடுகளிலேயே காட்டு யானைகள் தங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே அங்குள்ள காட்டு யானைகளை நிரந்தரமாக துரத்துமாறோ அல்லது அவற்றை பிடித்து சரணாலயங்களில் விடுமாறோ மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மக்கள் தமது குடியிருப்புக்களை அண்டியுள்ள பற்றைகளையும், விவசாய நிலங்களை அண்மித்துள்ள வாய்க்கால்களிலுமுள்ள பற்றைகளையும் அவ்வப்போது வெட்டி அகற்றும் பட்சத்தில் கிராமங்களை அண்மித்து காட்டு யானைகள் தங்கி நிற்காமல் வெளியேறி விடும் என்பதால் இந்த விடயத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் கோரியுள்ளனர்.
புதியது பழையவை