இலங்கை வருவார் என காத்திருந்த சாந்தன் வைத்தியசாலையில் உயிரிழப்பு!



தமிழகத்தின் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று (28-02-2024) அதிகாலை உயிரிழந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் அவரின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 24ஆம் திகதி சாந்தனுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. எனினும் அவர் கோமா நிலைக்கு சென்ற சாந்தன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

சாந்தன் மரணம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தன் ஈழத்தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார்.



தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசும் அனுமதி வழங்கியிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வாழும் சாந்தனின் தாயார் மகன் வருவார் இறைநம்பிக்கையோடும் மனநம்பிக்கையோடும் காத்திருந்தார். எனினும் துரதிஷ்டவசமாக மகனின் மரணம் செய்தி பேரிடியாக மாறியுள்ளது.
புதியது பழையவை