யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!




மஹியங்கனை காவல் பிரிவுக்குட்பட்ட அஹயபுர பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலியாகி உள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று (24-03-2024) அதிகாலையே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

யானை தாக்குதலில் உயிரிழந்த பெண் இல 4/170 , அஹயபுர,மாபாகடவெவ, மஹியங்கனை பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தனது வீட்டு பகுதிக்கு வந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட வேளையில் யானை தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இறந்த பெண்ணின் சடலம் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், பின்னர் மரண பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக மஹியங்கனை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவல் நிலைய பொறுப்பதிகாரி W.W.C.R.விஜேரத்னவின் தலைமையில் மஹியங்கனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை