மட்டக்களப்பில் கொக்குளை வேட்டையாட சென்ற போது துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!



மட்டக்களப்பு - வாழைச்சேனையில் உள்ள காட்டு பகுதிக்கு நண்பர் ஒருவருடன் இருவர் கொக்குளை வேட்டையாட சென்ற போது துப்பாக்கி வெடித்ததில் ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் (12-03-2024) மாலை சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்தவருடன் சென்ற நண்பனான ஆசிரியரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் வாழைச்சேனை - செம்மன்ஓடையைச் சேர்ந்த 32 வயதுடைய அத்துல் காதர் இம்தியாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரும் அவரது நண்பனான 52 வயதுடைய ஆகிய இருவரும் இரவு உணவுக்காக கொக்கு இறைச்சியை கொண்டு வருவதற்காக மாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து அரச அனுமதி பெற்ற துப்பாக்கியுடன் குறித்த காட்டு பகுதிக்குள் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, கொக்குகளை குறிபாத்து சுட முயற்சித்த போது துப்பாக்கி வெடித்ததில் துப்பாக்கியை இயக்கியவரின் கழுத்துபகுதியில் குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அவருடன் கூடச் சென்றவர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.

பின்னர், நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் சந்தேகத்தில் அவருடன் சென்ற நண்பனான 52 வயதுடைய ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை