ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!




சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ளது.  

இதன்படி, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.  

அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்த இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என எதிர்க்கட்சி மற்றும்  ஜே.வி.பி தெரிவித்துள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுடன் கூட்டம் 
எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கம் இடையில் நாளை (11-03-2024) அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.





இந்த கலந்தரையாடலுக்காக எதிர்க்கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளப் போவதில்லை என தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய அழைப்பை ஏற்று அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரை இதில் பங்கேற்க வைக்க தீர்மானித்துள்ளது.



அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும், அவரின் பங்கேற்பு தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் அவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை