இலங்கையில் பிறப்பு வீதம் - வெளியான அறிவிப்பு!



நாட்டில் கடந்த 5 வருடங்களில் குழந்தை பிறப்புகள் 100,000 க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக மகப்பேற்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் தகவல் வெளியிட்டுள்ளார்.

மகப்பேற்று விசேட வைத்தியர்களினால் கடந்த 5 வருட தகவல்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2017 ஆம் ஆண்டு நாட்டில் 325,000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் ஆனால், 2023 ஆம் ஆண்டு 247,000 ஆக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, 2017 ஆம் ஆண்டு வருடாந்த மரணம் 146,000 ஆக பதிவாகியுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு 181,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, கர்ப்பமடையும் திருமண வயதுடைய இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையினாலேயே குழந்தை பிறப்புகள் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிறப்பு வீழ்ச்சிக்கு காரணம்
பொருளாதார நெருக்கடியினால் குடும்பம் ஒன்றில் கருத்தரிப்பை மட்டுப்படுத்தல் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்திவைப்பதும் குழந்தை பிறப்பு வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பொருளாதார நெருக்கடியினால் கடந்த 5 வருடங்களில் திருமணம் செய்துகொள்வது 12.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் வைத்தியர் சனத் லெனரோல் கூறியுள்ளார்.

இதனால், வேலை செய்வோர் குறைவடைவதுடன், முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மகப்பேற்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை