கதிர்காமத்திற்கான காட்டு வழி பாதை திறக்கும் திகதியில் மாற்றம் - கிழக்கு ஆளுனர்



கதிர்காமத்திற்கு காட்டு வழியாக யாத்திரை செய்யும் யாத்திரிகர்களுக்கான காட்டுவழிப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.


இன்று (19-06-2024)மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் 02ஆம் திகதி யாத்திரை செய்யும் யாத்திரிகர்களுக்கான காட்டுவழிப்பாதை திறப்பதற்கான தீர்மானத்தை அம்பாறை அரசாங்க அதிபர் எடுத்திருந்த நிலையில் பக்தர்கள் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக எதிர்வரும் 30ஆம் திகதி காட்டு வழிப்பாதை திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாத்திரிகர்கள் உகந்தை வழியாக முன்னெடுக்கப்படும் பாதையாத்திரைக்கு அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் கிழக்கு மாகாணசபை முன்னெடுத்துள்ளதன் காரணமாக யாத்திரிகர்கள் எந்தவித இடர்பாடுகளுமின்றி செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் 06ஆம் திகதி கதிர்காம ஆலய கொடியேற்றம் நடைபெறவுள்ளதனால் 02ஆம் திகதி பாதை திறக்கப்படுவதனால் தாங்கள் செல்லமுடியாத நிலையேற்படும் என பக்தர்கள் தன்னிடம் தெரிவித்ததை தொடர்ந்து அம்பாறை மாவட்ட செயலாளருக்கு 30ஆம் திகதி பாதை திறப்பதற்கான பணிப்புரையை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதியது பழையவை