டக்கா முதல் கஜன்கள் - சுமோ வரை கைகோர்க்க வைத்த பொது வேட்பாளர்!



"மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி; எக்காலத்திலும் பிரிக்கமுடியாத வடகிழக்கு "  என்ற சுலோகத்தை யாழ். ஸ்ரீதர் தியேட்டரில் காட்சிப்படுத்தி அரசியல் செய்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
 பின்னர் வடகிழக்கு இணைப்புக்கெதிராக வழக்குத் தொடுத்து அதனை ரத்துசெய்யவைத்த ஜே.வி .பி யினருடன் கூட்டாக அமைச்சரவையில் அங்கம் வகித்தார். ஜே.வி. பி யினரை பாராளுமன்ற சிற்றுண்டி சாலையில் சந்தித்த வேளைகளில் கூட இந்த வழக்கை மீளப் பெறுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டதாகச் செய்திகள் வரவில்லை.  
 இந்தியாவின் ஏஜெண்டுகளே மலையக த்  தோட்டத்  தொழிலாளர்கள் என்பதே ஆரம்பத்தில் ஜே. வி. பி தலைவர் ரோகண விஜயவீர அன்றைய சிங்கள இளைஞர்களுக்கு  நடத்திய ஐந்தாவது வகுப்பின் சாராம்சம்.
 சிங்கள சினிமாத்துறைக்குப் பெரும் பங்காற்றிய சினிமாஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் அதிபர் கே.குணரத்தினம், சீனி  இறக்குமதியாளர் சண்முகம் முதலான தமிழ் முதலாளிகளைக் கொன்றொழித்தவர்களும் இவர்களே. 
வடகிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட  சிரான் அமைப்புக்கு எதிராகவும் வழக்குப்போட்டு அதற்கு தடை விதிக்கச் செய்ததும் ஜே. வி பி யினரே. 
சீனக் கம்யூனிஸ்ட்   கட்சியின் தலைவராக சண்முகதாசன் இருந்தார். ஒரு தமிழனுக்கு கீழ் கட் சிப் பணியாற்றுவதா  என்ற எண்ணம் மேலோங்கியதால்தான் ரோகண விஜே வீர ஜே. வி .பி யை தோற்றுவித்தார்.இன்று நாங்களும் சைவமாகி விட்டோம் என்று கூறிக்கொண்டு வாக்கு கேட்க வரும் இந்த நரிகளுக்கு தமிழர்களாக  நாம் எதிர்ப்பு வாக்குப்  பதிவதைப்  டக்ளஸ் அணியினர் ஏன் எதிர்க்க வேண்டும்?
***    
முதலாவது ஜனாதிபதி தேர்தலைப்  (1982 ) புறக்கணிக்குமாறு புலிகள் வேண்டுகோள் விடுத்தனர். ஆயினும்  இன்று கஜேந்திரன்,கஜேந்திரகுமார் அணியினர் போட்டியிடும் சைக்கிள் சின்னத்தில் குமார் பொன்னம்பலம் களமிறங்கினார்.
 இவருக்கு ஒரு லட்சத்து ஏழுபத்தி மூவாயிரத்தி தொள்ளாயிரத்து முப்பத்திநாலு வாக்குகள் கிடைத்தன. யாழ்ப்பாணம் 87263 - 40.03%, முல்லைத்தீவு (6654) இரு  மாவட்டங்களில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றவர் இவரே. மட்டக்களப்பு மாவட்டத்தில் 47095 (மட்டக்களப்பு 19338, பட்டிருப்பு 21918 , கல்குடா 5280) , திருகோணமலை 10068. அம்பாறை 8079 , வவுனியா 2689, மன்னார்1891, கொழும்பு 3022, புத்தளம் 817, பதுளை 625, கண்டி 562, நுவரெலியா 558,கம்பஹா 534, குருநாகல் 509, மாத்தறை 474,களுத்துறை 443,காலி 425,இரத்தினபுரி 422,கேகாலை 376,அம்பாந்தோட்டை 275 , மாத்தளை 253, பொலநறுவை 228, அனுராதபுரம் 222, என நாடளாவிய ரீதியில் வாக்குகள் பெற்றார் குமார். 
இன்று பொது வேட்பாளர் விடயத்தில் தீவிரமாக ஈடுபடுவோரை சீற்றத்துடன் துரோகிகள் என்று குற்றம் சுமத்தும் கஜன்களுக்கு அன்று புலிகள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்து தேர்தலில் போட்டியிட்டது தவறு என்று கூறும் திராணி இருக்கிறதா ? "ஒரு தமிழனாகப் போட்டியிடுகிறேன் வாக்களியுங்கள்" என்றுதான் குமாரும் சொன்னார். 
இன்னமும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற பெயரை தேர்தல் திணைக்களத்தில் மாற்றத் தைரியம் இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு துரோகிப்  பட்டம்   சூட்டுவதை ஏற்க முடியுமா? இறுதியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினருக்கும்  துரோகிப் பட்டம் சூட்டுகின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பெயரில் நிதி கோருவதில்லை என்பது ஏற்பாட்டுக்கு குழுவினரின் நிலைப்பாடு. இதைத் தொடரவிடுவது பலருக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும்.

"ஒருநாடு இரு தேசம்" என்பது இவர்களின் சுலோகம் இந்த இரு தேசங்களிலும் எந்தத் தேசத்தில் இவர்களின் தலைவர் கஜேந்திரகுமாருக்கு கூடுதலாக சொத்துக்கள் உண்டு என்று பகிரங்கமாக கூறமுடியுமா?

"வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் தேசியப்பட்டியல் என்று வந்தால் வடக்கே தாயகம் " என்ற பிரகடனப்படுத்தப்படாதா நிலைப்பாட்டுக்கு உதாரணம்தான் கஜேந்திரனின் எம்.பி பதவி. 
அரசியலில் வடக்கின் ஆதிக்கத்தை எதிர்த்தே அரசியல் நடத்துகிறோம் என்று வெறும் வாயை மெல்லும் பிள்ளையான்,ஞானம் , அழகு குணசீலன், கோபாலகிருஷ்ணன்,சீவகன் போன்றோரின் வாய்களுக்கு அவல் கொடுத்ததுதான் இவர்கள் செய்யும் அரசியல். அதுவும் பொது வேட்பாளர் கிழக்கில் இருந்துதான் தெரிவாவார் என்ற செய்திகள் கசியும் போது  இன்னும்  மூர்க்கத்தனமாக இருக்கிறார் கஜேந்திரன்.
2005 ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் "எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்காவின் ராஜதந்திரமே புலிகளிடமிருந்து கருணவைப் பிரித்தது" என்று ரணிலுக்கு புகழாரம் சூட்டினார் அப்போதைய நுவரெலியா மாவட்ட  எம் பி நவீன். யாழ் நூலக எரிப்பின்   மூலம் `புகழ்` பெற்ற காமினி திஸாநாயக்கவின் மகனே இந்த நவீன். முன்னாள் சபாநாயகர் கரு. ஜெயசூர்யாவின் மருமகன். 
நவீனின் கூற்றும் அன்று புலிகள் ஜனாதிபதி தேர்தலை பஸ்கரிக்கும் முடிவுக்கு வந்ததற்கு ஒரு காரணம். இன்று பிள்ளையான் ரணிலைப் பகிரங்கமாக ஆதரிக்கிறார்.கஜேந்திரகுமாரின் நிலைப்பாடு மறைமுகமான ரணில் ஆதரவேதான்.வடிவேல் பாணியில்  இரத்தம்- தக்காளி சட்டினி கதைதான்.அப்பனுக்கு ஒரு நியாயம், வரப்போகும் பொது வேட்பாளருக்கு ஒரு நியாயம்.போலியாக தமிழ் தேசிய முன்னணி என்று கூச்சல் போடுவதை விடுத்து தேர்தல் திணைக்களத்தில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சி பெயரை மாற்ற உருப்படியாக எதையும் செய்யட்டும்.
*** 
2009 வரை சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் தொண்டனாக இருந்ததில்லை. என அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு இக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ .வி .கே சிவஞானம் தெரிவித்திருந்தார்.முதன் முறையாக சுமந்திரன் பாராளுமன்றத்துக்கு  தெரிவாகிய காலகட்டத்தில் மற்றொரு   எம்.பியான ஸ்ரீரங்காவுடன் சிறு முரண்பாடு ஏற்பட்டது.இவரைப் பார்த்து "நான் நுவரெலியா மக்களின் வாக்குகளைப் பெற்றே எம்பியானேன். நீர்  சம்பந்தன் ஐயாவின் கோவைகளைத்  தூக்கித் திரிந்தால் எம்பியாகினீர்"  என்று கூறினார் ஸ்ரீரங்கா.
தான் பரமசிவன் கழுத்து பாம்புதானே என்ற நினைப்பில் இவர் செய்த கோளாறுகளுக்கு மிக நீண்ட பட்டியல் உள்ளது. முள்ளிவாய்க்கால் அவலம் குறித்து மற்றவர்கள் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற போது "இல்லை ; உள்ளூர்  பொறிமுறையை போதும்" என்றார். போதிய சான்றுகள் இல்லை என்றார். விசாரணையே முடிந்து விட்டது என்றார்.
இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் வடமாகாண சபையில் முதல்வரால் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேறியது.அதனைத் தொடர்ந்து முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. 
யு ஸ் ஹோட்டலில் நடந்த சந்திப்பு ஒன்று  தொடர்பாக விந்தன் கனகரெத்தினம் பலவிடயங்களைத் தெரிவித்தார்.உறுப்பினர் ஆர்னோல்ட் போன்றோர் தெரிவித்த விடயங்களில் இம் முயற்சியின் மறைகரங்கள் சுமந்திரனுடையவை எனப் புரியவந்தது. 
குறிப்பாக சம்பந்தன் ஐயாவுடனோ கட்சி நிர்வாகிகளிடமோ இது சம்பந்தமாக எந்தக்  கலந்துரையாடலும் நடைபெறவில்லை என தெரிய வந்தது. எனினும் தன்சார்பில்   இந்த முயற்சியை மேற்கொண்ட ஆர்னோல்ட்டுக்கு யாழ் நகர மேயர் பதவியை வழங்க இவர் தன்னிச்சையாக  முடிவினை எடுத்தார்.  
இவ் முடிவினை கட்சித்தலைவரும், செயலாளரும் மறுத்த போதும் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்; ஆனால் ஆர்னோல்ட் தான் மேயர் என்றார்.  அதாவது எந்தக் கலந்துரையாடலுக்கும் இடமில்லை; இங்கு நான் தான் எல்லாமே என்பது அவர் சொல்லும் மறைமுகமான செய்தி. 
மகிந்தா காலத்தில் மகசின்  சிறையிலிருந்த அரசியல் கைதிகளிடம் போய் உங்கள் விவகாரம் என்னிடந்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நான் கோத்தா வுடன் டின்னருக்குச்  செல்பவன். எனவே உங்களை நான் விடுவிப்பேன். எனவே வேறு எவரிடமும் இது பற்றி கதைக்கத் தேவையில்லை என்றார். தொடர்ந்து மைத்திரியின் காலத்திலும் இவரால் எந்த ஆணியையும் புடுங்க முடியவில்லை. அக்காலத்தில் பாராளுமன்றில் ஒரு வாக்கெடுப்பு தொடர்பாக சிறீதரன் எம் . பி சில விடயங்கள் சம்பந்தமாக நாங்கள்  நிபந்தனைகளை வைக்க இருக்கிறோம் என்றார்.இதற்கு சுமந்திரன் நாங்கள் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை  அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றார்.   அப்போது  அரசியல் கைதிகளின் விடயம் கூட அவருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. 
இவர் இன்று பொது வேட்பாளர் விடயத்தில் 09. 06.2024 திகதி பகிரங்க வெளியில் கலந்துரையாடல் செய்வோம் என அழைப்பு விடுத்துள்ளார். கட்சிக்குள்ளையே கலந்துரையாடல் இல்லை; இந்த விடயத்தில் பொதுவெளிக்கு வாருங்கள் என்றால்  அங்கே  சந்தைக் கூச்சல் ஏற்படுத்துவதைத் தவிர வேறெந்த  நோக்கம் உண்டு ? 
முடிவில் பொது வேட்பாளர் என்ற விடயத்துக்கு பலத்த எதிர்ப்பு என்று இவருக்கு தாளம் போடும் ஊடகங்கள் செய்தி வெளியிடும். 
கட்சி நிர்வாகிகள் தெரிவிலேயே கூச்சல் ,குழப்பம் ,வழக்கு என்று கூத்துக்கள் நடைபெறுகையில் பொதுவெளிக் கலந்துரையாடல் என்ற இந்த நரித்தனமான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது .  
தன்னை அரசியலுக்கு கொண்டுவந்த சம்பந்தன் ஐயாவையே  மூப்பாகிவிட்டீர்கள் உங்களால் செயற்பட முடியாது (இதன் அர்த்தம் அறளை பெயர்ந்து விட்டது)
 எம். பி பதவியை விட்டு விலகுங்கள் என்று நன்றி மறந்த விதமாக கூறிய சுமந்திரனும், 40,000 ஆயிரம் இராணுவத்தினரை  சவப்பெட்டியில் அனுப்புவோம் என்று பாராளுமன்றத்தில் வீரம் பேசிவிட்டு இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன கஜேந்திரனும் பொது வேட்பாளர் விடயத்தில் கைகோர்த்துள்ளனர்.
இத்தனை சுமைகளையும் எதிர்கொண்ட நாங்கள் பொது வேட்பாளர் விடயத்தில் ஒன்று பட்டு நிற்போம்.
முன்னாள் போராளிகள்,  மாவீரர், நாட்டுப்பற்றாளர்கள் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள்,தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் ஏனையோர்  வெற்றுக் காசோலையாக எமது வாக்குகளை சிங்கள வேட்பாளர்களுக்கு அளிக்காமல் அர்த்தமுள்ள எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
எமது வலி  சுமந்திரன் ,கஜேந்திரன் ,டக்ளஸ் போன்றோருக்கு தெரிய நியாயமில்லை.
-சங்கரன்
புதியது பழையவை