5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது!



அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று நகர பகுதியில் 5 ஆயிரம் ரூபா 10 போலி நாணயத்தாள்கள், துண்டுபிரசுரங்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்களை கார் ஒன்றில் எடுத்துச் சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட  3 பேரையும் எதிர்வரும் (22-10-2024)ஆம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானால் நேற்று (19-10-2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபற்றி தெரியவருவதாவது, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேர்தல் பிரசாரம், சம்பவதினமான நேற்று (19) மாலை இடம்பெற்ற போது, கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் உட்பட கட்சி ஆதரவாளர்கள் சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் தம்பட்டை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று நகர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கை முடிவடைந்த வாகனங்கள் மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்துக் கொண்ட நிலையில் அக்கரைப்பற்று நகர்பகுதியில் குறித்த காரை விசேட அதிரடிப்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர்.

இதன் போது காரில் இருந்தவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா கொண்ட 10 போலி நாணயத்தாள்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்கள், 200 துண்டுப்பிரசுரங்கள், மோதிர அளவு எடுக்கும் கேர்வை என்பவற்றுடன் 3 பேரை கைது செய்ததுடன் காரையும் மீட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணை
இதில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த கட்சியின் உறுப்பினர்கள் எனவும் களுவாஞ்சிக்குடியில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டவரும் 2015ம் ஆண்டு துப்பாகியுடன் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த ஒருவரும், சித்தாண்டி மற்றும் வெலிகந்தை தரப்பளை பிரசேத்தைச் சேர்ந்தவர்கள் என விசேட அதிரடிப்படையினரது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதனையடுதது கைது செய்தவர்களை அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் இவர்களை நேற்று அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினரும் அக்கரைப்பற்று பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை