முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!



2022 ஆம் ஆண்டு சோசலிச இளைஞர் சங்கம் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளளது.

அதன் படி, குறித்த உத்தரவானது, இன்று (22-10-2024) உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், சோசலிச இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவினால் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.


நீதிமன்ற அனுமதி

இந்த நிலையில், மனுக்கள் இரண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டப் போது, மனுதாரர்களின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து உயர் நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது.


கடந்த 2022 ஆம் ஆண்டு அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு என்ற தொனிப்பொருளில் ரணிலின் ஆட்சிக்கு எதிப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) இளைஞர் அமைப்பான சோசலிச இளைஞர் சங்கம் கொழும்பில் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

இந்த போராட்டம், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த போது, ​​தொடர்ந்தும் சட்டவிரோதமாக போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக 83 பேரை காவலில் எடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் (2022-09-25) அன்று அறிவித்திருந்தது.


அதன் போது, லிப்டன் சுற்று வட்டத்திலிருந்து டீன்ஸ் வீதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் செல்லத் தொடங்கியவுடன், அது 1865 ஆம் ஆண்டு காவல்துறை கட்டளைச் சட்டம் இலக்கம் 16 மற்றும் இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சட்டவிரோதமானது மேற்கோள் காட்டி போராட்டக்கார்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவித்தனர்.

அதனை பொருட்படுத்தாது போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் முன்னேறிய நிலையில், அவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.
புதியது பழையவை