கடந்த ஆண்டு இந்தியாவுடன் ஏற்றுக்கொண்ட ”நோக்கு ஆவணத்தை" (vision document) தனக்குப் பின்னர் பதவியேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் வைத்து அவர் இந்த விடயத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.
பொருளாதாரக் கூட்டாண்மை
இந்த ஆண்டு செப்டம்பரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி திசாநாயக்க, எதிர்வரும் டிசம்பர் நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்த சூழ்நிலையிலேயே ரணிலின் கருத்து வெளியாகியுள்ளது.
2023 இல் தனது இந்தியப் பயணத்தின் போது, அப்போதைய ஜனாதிபதி விக்ரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பின் பகுதிகள், குறிப்பாக பொருளாதாரக் கூட்டாண்மை ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டும் தொலைநோக்கு ஆவணத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கையெழுத்திட்டார்.
மக்களிடையேயான தொடர்பு
இந்த தொலைநோக்கு ஆவணத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் பகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
எனவே அதனை அநுரகுமார திசாநாயக்க முழுமையாக செயற்படுத்த வேண்டும் என்று தாம் கருதுவதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தூரில் உள்ள ஸ்ரீசத்ய சாய் வித்யா விஹார் கல்லூரியில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட விக்ரமசிங்க, இலங்கையும் இந்தியாவும் ஏற்றுக்கொண்ட தொலைநோக்கு ஆவணம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல், வான், எரிசக்தி உறவுகள் மற்றும் மக்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சுற்றுலா, மின்சாரம், வர்த்தகம், உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை விரைவுபடுத்தவும் அதில் திட்டங்கள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.