அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்




தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஃபெங்கல் புயல், நேற்று காலை 11.30 மணியளவில் வட தமிழகம் - புதுச்சேரி கரையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்ததது.


ஃபெங்கல் புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், இராணுவத்தினர் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இதன்போது மீட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், புதுச்சேரியில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரியில் 480 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதற்கமைய, தற்போது புதுச்சேரியின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை