இலங்கை அரசுமட்டும் அல்ல சர்வதேசமும் தமிழர்களை ஏமாற்றுகிறது -பா.அரியநேத்திரன். மு.பா.உ.




கடந்த பதினைந்து வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய சர்வதேச விசாரணை வேண்டும் என போராடுகிறார்கள் அவர்களை இலங்கை அரசு ஏமாற்றுவதைப்போல் சர்வதேசமும் தமிழினத்தை ஏமாற்றிவருகிறது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிட்டு 226322, வாக்குகளை பெற்று இலங்கையில் ஐந்தாம் இடத்தைப்பெற்றவரும், தமிழ்தேசியவாதியுமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமை தினமான இன்று(10-12-2024) மட்டக்களப்பு தந்தை செல்வா சதுக்கத்தில் இருந்து காந்தி சதுக்கம் வரையிலான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தால் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு கருத்து மேலும் தெரிவிக்கையில்.

இலங்கை ஆட்சியாளர்களின் ஜனாதிபதிகளின் பெயர்களும் தோற்றங்களும் மாறுகிறதே தவிர அவர்களுடைய செயல் இன்னும் மாறவில்லை ம, மை, கோ, ற, அ, என முன்எழுத்துள்ள பெயர்களை மாற்றி உருவங்கள் ஆட்சிபீடம் ஏறினாலும் உண்மையில் அவர்கள் எவருமே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, இனப்படுகொலைக்கான நீதி எதையுமே தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

இலங்கை அரசின் நீதியில் நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான் சர்வதேச நீதி தேவை என அனைத்துலக சமூகத்திலும், ஐ நா மனித உரிமை ஆணையகத்திலும் தமிழ்தேசிய அரசியல் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை அமைப்புகளும் கடந்த பதினைந்து வருடங்களாக போராடியும், சர்வதேச நாடுகளுகளுக்கு சென்று முறையீடு செய்தும் வருகிறோம்.

அதைவிட புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளும், செயல்பாட்டாளர்களும் 15, வருடங்களாக ஓயாமல் உழைத்து வருகின்றோம்.

ஆனால் சர்வதேசமும் இலங்கை அரசைப்போன்றே தமிழினத்தை பதினைந்து வருடங்களாக ஏமாற்றியுள்ளது. அப்படியானால் இனி யாரிடம் எமக்கான நீதியை எதிர்பார்பது எனவும் மேலும் கூறினார்.



புதியது பழையவை