கண்டி - அம்பரப்பொல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் நேற்றையதினம் (11-01-2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
2 இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கருப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர்.
மாணவியை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிரிவி காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, சம்பவத்தின் போது பயந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியதுடன், அவரை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.
கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த வாகனம் வாடகைக்கு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடத்தப்பட்ட சிறுமி மற்றும் கடத்தலை மேற்கொண்ட நபர் தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
எனினும் கடத்தலில் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.