சட்டமா அதிபரால் அரசுக்கு இன்னொரு தலைவலி ...



லசந்த கொலை வழக்கின் சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்துரை செய்திருப்பது , அரசுக்கு இன்னொரு தலையிடியாக வந்து விழுந்துள்ளது.

லசந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள், பாதுகாப்புத் துறையில் உயர் பதவிகளை வகிப்போராக இருக்கின்றனர்.

இவ்வாறு விடுவிக்க பரிந்துரைக்கப்படும் சந்தேக நபர்கள் இராணுவ சார்ஜென்ட் பிரேம் ஆனந்த உதலாகம, உதவி பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸசிரி சுகதபா மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் ஆவர்.

இந்த நடவடிக்கையானது ,  வழக்கை நீர்த்துப் போக செய்ய, வெளியில் இருந்து எவராவது, சட்டமா அதிபருக்கு அழுத்தங்களை கொடுத்திருக்கிறார்களா அல்லது வேறு ஏதாவது பின்னணிகள் உள்ளனவா என்பதில் அரச தரப்பு சற்று அதிர்ந்து போய் உள்ளது.

எனவே அரசு, சட்டமா அதிபரை, பதவி நீக்க முடியாத நிலையில், விடுப்பில் அனுப்பப் போவதாக தெரிகிறது. அத்தோடு இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றையும், ஒரு அமைப்பு செய்ய உள்ளது. அந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக, சட்டமா அதிபர் மேல் ஒரு முடிவுக்கு வர அரசுக்கு வாய்ப்புள்ளது.

அத்தோடு காலஞ்சென்ற ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி ஊடகவியலாளர் சோனாலி சமரசிங்கவை, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் மினிஸ்டர் கவுன்சிலராக அரசு வேக வேகமாக நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனூடாக சர்வதேச அழுத்தம் ஒன்றை பிரயோகித்து , பின்னணியில் திரை மறைவாக செயல்படும் சம்பந்தப்பட்ட பெரும்புள்ளிகளுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்த  அரசு செயல்படுவது போல தெரிகிறது.
புதியது பழையவை