எதிர்வரும் மார்ச் 14ஆம் திகதி மு.ப. 8.30 மணிக்கு முன்னர் தங்களது முகவர்களை நியமிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடக அறிவித்தலொன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்ளூரராட்சி சபைத் தேர்தல்கள் கட்டளைச்சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 89 ஆம் பிரிவின்படி வேட்புமனு கோரும் காலப்பகுதி ஆரம்பிக்க குறைந்தபட்சம் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆகையால், 2025.03.03 ஆம் திகதி பெயர் குறித்த நியமன (வேட்புமனு) கோரலுக்கனான அறிவித்தல் வெளியிடப்பட்ட 336 உள்ளூர் அதிகார சபைகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் கடிதங்கள் மார்ச் 14 ஆம் திகதி மு.ப. 8.30 மணிக்கு முன்னர் அந்தந்த உள்ளூர் அதிகார சபை தெரிவத்தாட்சி அலுவலருக்கு (மாவட்ட பிரதி/உதவி தேர்தல்கள் ஆணையாளர்) வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
சுயேச்சைக் குழுக்கள், குறித்த குழுத் தலைவரினால் வைப்புப் பணம்
செலுத்தப்படும் சந்தர்ப்பத்தில் வேட்பாளர்களில் எவரேனும் ஒருவரை அக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராக நியமிக்க முடியும்.
2025 மார்ச் மாதம் 13 ஆம் திகதி வியாழக்கிழமை (போயா தினம்) அரசாங்க விடுமுறை தினமொன்றாக இருந்தபோதும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகமும் அனைத்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களும் திறந்துவைக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.