தந்தை செல்வாவின் 48, ம் ஆண்டு நினைவு!



அறிந்தும் அறியாத உண்மைகள்..!

தந்தை செல்வா இயற்கை எய்திய நாள் 1977,ஏப்ரல்,26.
அவர் இறப்பதற்கு முன் சரியாக 11 மாதங்கள்,12, நாட்கள் முன் அவர் இறுதியாக கூறியது மட்டுமல்ல அவரால் இறுதியாக நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை பிரகடனம்.
1976,மே,14, ல்..!

தந்தை செல்வா (சா.ஜே.வே.செல்வநாயகம்) தலைமையில் வட்டுக்கோட்டை பண்ணாகம் ஊரில் மெய்கண்டான் வித்தியாலய மைதானத்தில் குறித்த மாநாட்டில் தந்தை செல்வாவால் முன்மொழியப்பட்டு, உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தினால் வழிமொழியப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முக்கிய பகுதிகள் இப்படித்தான் அமைந்தன:

'இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றினாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தினால் அவர்கள் வெற்றி கொள்ளும்; வரை பல
நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தனிவேறான அரசாகச் சுதந்திரமாக இயங்கிய வரலாற்றின் காரணமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தமது சொந்தப் பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களிலிருந்து வேறுபட்ட தனித் தேசிய இனமாகவுள்ளனரென, இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத் தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த் தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம், மொழி, பிரசாவுரிமை, பொருளாதார வாழ்க்கை, தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச்செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக் கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன்மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.

தமிழ் ஈழம் என்ற தனிவேறான அரசொன்றைத் தாபிப்பதற்கான அதன் ஈடுபாட்டுக்கடப்பாடு தொடர்பில், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே வாழ்கின்றவர்களும் வேலை செய்கின்றவர்களுமான பெரும்பான்மையான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளிப்படுத்திய அதன் ஒவ்வாமைகளைக் கருத்தில் கொள்கின்ற அதேவேளையில், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமை பொருந்திய, சமயச் சார்பற்ற, சமதர்மத் தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாததாகி உள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.
இம்மாநாடு மேலும் பிரகடனப்படுத்துவதாவது:

✔️(அ) தமிழ் ஈழ அரசு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களைக் கொண்டதாக இருக்கவேண்டுமென்பதுடன் இலங்கையின் எந்தப்பகுதியிலும் வசிக்கின்ற தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் தமிழ் ஈழத்தின் பிரசாவுரிமையை விரும்பித் தெரிகின்ற உலகின் எப்பகுதியிலும் வசிக்கின்ற ஈழ வம்சாவழித் தமிழர்களுக்கும் முழுமையான, சமமான பிரசாவுரிமைகளை உறுதிப்படுத்தவும் வேண்டும். தமிழ் ஈழத்தின் ஏதேனும் சமயத்தைச் சேர்ந்த அல்லது ஆட்சிப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூகமொன்று வேறு ஏதேனும் பிரிவினரின் மேலாதிக்கத்திற்கு உட்படாதிருத்தலை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பு சனநாயகப் பன்முகப்படுத்தற் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

✔️(ஆ) தமிழ் ஈழ அரசில் சாதி ஒழிக்கப்பட வேண்டுமென்பதுடன், பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்படும் பெருங்கேடான பழக்கமான தீண்டாமை அல்லது ஏற்றதாழ்வு முற்றாக ஒழித்துக் கட்டப்படவும் எவ்வகையிலேனும் அதனைக் கடைப்பிடித்தல் சட்டத்தால் தண்டிக்கப்படவும் வேண்டும்.

✔️(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச் சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.

✔️(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும். எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

✔️(உ) தமிழ் ஈழத்தில் மனிதனால் மனிதன் சுரண்டப்படுதல் தடை செய்யப்படும். உழைப்பின் மகத்துவம் பாதுகாக்கப்படும். சட்டத்தினால் அனுமதிக்கப்படும் எல்லைகளுக்குள் தனியார் துறையின் இருப்புக்கு அனுமதி வழங்கப்படுகின்ற அதே வேளையில், பண்டங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பன அரச உரிமையின் கீழ் அல்லது அரச கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளப்படும். பொருளாதார அபிவிருத்தி சோசலிசத் திட்டமொன்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும். ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் செல்வம் தொடர்பில் உச்சவரம்பு விதிக்கப்படும். இவ்வகையில் தமிழ் ஈழம் ஒரு சமதர்ம அரசாக இருக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கான செயற்றிட்டமொன்றை மிதமிஞ்சிய தாமதமின்றி வகுத்தமைத்து அதனைத் தொடங்கவேண்டுமென தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழுவை இம்மாநாடு பணிக்கின்றது. 

மேலும் இம்மாநாடு, சுதந்திரத்துக்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது'.

இதுதான் தந்தை செல்வா சாவதற்கு முன் முன்மொழியப்பட்ட தீர்மானம்( பிரகடனம்) ஆகும்.

தந்தை செல்வா இறந்து இன்று 26/04/2025, 48, ஆண்டுகள் கடந்துள்ளது..
வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்னும் 18, நாட்களால் 49, வருடங்கள் எட்டுகிறது 14,மே,2025, ல்.
1976, மே, 14, ல் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான வடக்கு கிழக்கு மக்களின் ஆணையை பெறும் தேர்தலாக 1977, யூலை,21,ல் வடகிழக்கில் 23, தொகுதிகளில் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர்களை போட்டியிட வைத்தது அதில் 18, தொகுதிகளில் ஆணை கிடைத்தது.மொத்தவாக்குகள் 421,488.

தோல்வியடைந்த 05, தொகுதிகள்:
1. கல்குடா தொகுதி இதில் சம்மந்தமூர்த்தி தோல்வி, இவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட கே.டவிலியூ, தேவநாயகம் வெற்றிபெற்று நீதி அமைச்சரானார்.
2. மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் செ. இராசதுரை தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன்  சின்னத்தில் 26,648 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார், காசி ஆனந்தன் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி வீடு சின்னத்தில் 22,443  வாக்குகளை பெற்று தெரிவாகவில்லை, இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர் இடம் எம். எல். அகமது பரீத் ஐ.தே.கட்சி 25,345 வாக்குகளை பெற்று இரண்டாவது பா.உ, தெரிவானார்.
3. மூதூர் தொகுதி எஷ்.எம். மக்கீன் தோல்வி.
4. கல்முனைத்தொகுதி ஏ.எம்.சம்சுதீன் தோல்வி.
5. சம்மாந்துறை தொகுதி எச்.எல்.எம்.காசீம் தோல்வி

1977, ல் இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல்தடவையாக தமிழர் விடுதலை கூட்டணி 18, ஆசனங்களுடன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்கவேண்டியது அப்போதைய தந்தை செல்வா இறந்ததற்குப்பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமை இரண்டு தவறுகளை செய்துள்ளது என்பது உண்மை.
1. மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இரண்டு தமிழர்களை இறக்கி செ.இராசதுரையையை தோற்கடிக்க காசி ஆனந்தனையும் வேட்பாளராக்கியபோதும் செ.இராசதுரையே வெற்றிபெற்றார்.
2. மட்டக்களப்பு இரட்டை தொகுதி தமிழர் ஒருவரும், முஷ்லிம் ஓருவரும் தெரிவாகுவதற்காகுவதே வழமை. அதனை முறியடிக்க இரண்டு தமிழர்களை ஒரே தொகுதியில் ஒரே தமிழ்த்தலைமை வேட்பாளர்களாக நிறுத்தியது மிகத்தவறான முடிவு.                                   ஆனால் தந்தை செல்வா உயிருடன் இருந்திருந்தால் இதனை அனுமதித்திருக்க மாட்டார் என்பதே உண்மை.

-பா.அரியநேத்திரன்-
26/04/2025.
புதியது பழையவை