காரைத்தீவு மக்கள் தொகையில் சடுதியான வீழ்ச்சி - பிரதமர் ஹரிணி அமரசூரிய



1977ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சுமார் 80 ஆயிரம் பேர் வரை வாழ்ந்த காரைத்தீவு மண்ணின் மக்கள் தொகை தற்போது 10,500ஆக உள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

காரைநகரில் நேற்றையதினம்(11-04-2025) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மேடையில் இருக்கின்ற பொழுது, காரைநகர் தொடர்பாக சில விடயங்களை அறிந்தேன். நான் பெற்றுக்கொண்ட தகவல்கள் என்னை சற்று மனக்குழப்பத்துக்கு உள்ளாக்கியுள்ளன.



என்ன தீர்வு?

1977ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் காரைத்தீவு மண்ணில் சுமார் 80 ஆயிரம் பேர் வாழ்ந்தார்கள். ஆனால், இன்று சுமார் 10,500 பேர் மாத்திரமே வாழ்கிறார்கள். மிகுதி பேர் எங்கே?

யாழ்ப்பாணத்தில், இலங்கையில் மற்றும் சிலர் புலம்பெயர் தேசங்களில் மிகுந்த பணக்காரர்களாகவும் கல்வித்தகைமை உடையவர்களாகவும் உள்ளவர்கள் காரைநகரை சேர்ந்தவர்கள் என்று நான் அறிந்தேன். அது மிகவும் சிறப்பானது.

அவர்கள் கல்வியை பெற்றுக்கொள்வதற்காகவும் தமது வாழ்க்கை தகைமையை உயர்த்திக்கொள்வதற்காகவுமே காரைநகரை விட்டு வெளியேறினார்கள் என்பதுதான் பிரச்சனை.



இங்கிருந்து வெளியேற முடியாத மக்களுக்கு என்ன தீர்வு? அவர்களும் எமது நாட்டு பிரஜைகள் இல்லையா? எல்லோரையும் போல அவர்களுக்கும் சமமான உரிமைகளும் முன்னுரிமைகளும் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதியது பழையவை