இலங்கையில் தற்போது சிக்கன்குனியா வைரஸ் நோய் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வைரஸின் மிக முக்கியமான மீள் எழுச்சியாக இது கருதப்படுகிறது என பிரபல வைரஸ் நிபுணர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் மலவிகே தனது சமூக வலைத்தள பக்கமான 'X' இல் இந்த கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துள்ளார். ஆக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி வைரஸ் விகாரத்தின் முழு மரபணு வரிசைமுறை மேற்கொள்ளப்பட்டதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது இலங்கையில் பரவி வரும் வைரஸ் விகாரம், தெற்காசியாவின் பிற பகுதிகளில் காணப்படுவதற்கு ஒத்த இந்தியப் பெருங்கடல் வம்சாவளியைச் (Indian Ocean Lineage - IOL) சேர்ந்த சிக்கன்குனியா வைரஸ் என்பதை முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
"16 வருடங்களாகப் பெரிய அளவில் பரவல் இல்லாதிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கன்குனியா பரவல் இதுவாகும்," என்று பேராசிரியர் மலவிகே குறிப்பிட்டுள்ளார்.