இலங்கை க்குள் போதைப்பொருள் கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருபிரித்தானிய யுவதி, தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் உள்ள நிலைமைகள் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார்.
தெற்கு லண்டனைச் சேர்ந்த 21 வயதான சார்லோட் மே லீ, தாய்லாந்திலிருந்து, இந்த மாத ஆரம்பத்தில், வந்தபோது அவரது பயணப்பொதியில் 46 கிலோ குஸ் ரகப்போதைப்பொருள் இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.
இலங்கையின் நீதிமன்றில் முன்னிலை
இந்தநிலையில், ஐந்து பெண்களுடன் ஒரு அறையைப் பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், கொங்கிரீட் தரையில் ஒரு மெல்லிய மெத்தையில், தனது ஆடைகளையே தலையணையாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
லீ மீது இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை, எனினும் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.
இதற்கிடையில் அவர் நேற்று இலங்கையின் நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட அவர், தனது நாளின் பெரும்பகுதியை சிறைக்குள்ளேயே செலவிடுவதாகக் கூறியுள்ளார்.
தாம் ஒருபோதும் சிறைக்குச் சென்றதில்லை, அத்துடன் இலங்கைக்கும் வந்ததில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.