மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்ட நிலையில் மூழ்கிக்காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கரடியனாறு- வேப்பவெட்டுவான் – பாலர்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய சிவகுமார் என்ற கூலித் தொழிலாளியே மரணித்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.
வேளாண்மை வாடியொன்றில் காவலாளியாகப் பணியாற்றிய இவர் கடைத்தெருவிற்குச் சென்று வருவதாக அவரது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளபோதிலும் இரவாகியும் வயல் வாடிக்குத் திரும்பவில்லை. இவரை தேடியவேளையில் வயல்வாடிக்கு மிகஅண்மித்துள்ள ஆற்றுநீரோடையில் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கரடியனாறு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஏறாவூர் திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நசிர் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டு சடலத்தை தண்ணீரிலிருந்து வெளியே எடுக்க முற்பட்டபோது அருகிலிருந்த வயல்வாடியின் நீர் பம்பியுடன் தொடர்புபடுத்தி வலது கால் கட்டப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
இதனால் தடயவியல் சொக்கோ பொலிஸார் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதுடன் ஏறாவூர் நீதிமன்ற பதில் நீதிபதி கே.தியாகேஸ்வரன் அங்கு வருகைதந்து பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
இதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.
கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.