விளையாட்டுத்துறை அமைச்சின் வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்திய சாரதியொருவர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் விளையாட்டுத்துறை அமைச்சின் போக்குவரத்துப் பிரிவுக்கு வந்த அதன் சாரதியொருவர், அலுவல் ரீதியான பயணமாக செல்வதாகத் தெரிவித்து சொகுசு வாகனமொன்றை வெளியில் எடுத்துச் சென்றுள்ளார்.
அதன் பின்னர், இரண்டு நாட்கள் கழித்து இரவு நேரமொன்றில் திருட்டுத்தனமாக வாகனத்தை மீண்டும் அமைச்சு வளாகத்தினுள் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
சம்பவம் குறித்து
விளையாட்டுத்துறை அமைச்சின் பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் குருந்துவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் குறித்த சாரதி மீண்டும் கடமைக்குத் திரும்பிய நிலையில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் குறித்த வாகனத்தை சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி இருந்தாரா அல்லது வாடகைப் பயணங்களுக்கு வழங்கியிருந்தாரா போன்ற விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.