மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று(04.05.2025) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 455,520பேர் தகுதிபெற்றுள்ளதுடன் அவர்கள் வாக்களிப்பதற்காக 447 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வாக்களிப்பு நிலையங்களில் காலை 07.00மணி தொடக்கம் மாலை 04.00மணி வரையில் தமது வாக்கினை செலுத்தமுடியும். வாக்கு எண்ணும் பணிகள் 4.30மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. வாக்கெண்ணுவதற்காக 144 வாக்கெண்ணும் நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 383 தேர்தல் விதிமீறல்கள் முறையிடப்பட்டுள்ளன. எந்தவொரு வன்செயலும் இதுவரையில் அறிக்கையிடப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 6000 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்களை சுமுகமான முறையில் தேர்தலை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.