தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்



“மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் காலமானார்.

பண்டிதர் பரந்தாமன் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு தமிழறிஞர் ஆவார். இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி முதலிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.



வீரவணக்கம்  மொழிக்கான இனத்துக்கான தேசத்துக்கான வீரவணக்கம் 

இனத்துக்காகவும், தமிழ்மொழிக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடியர். 

தமிழ்த் துறை ஆசானும், பண்டிதரும், பருத்தித்துறையைச் சேர்ந்த முன்னாள் ஹாட்லி கல்லூரி தமிழ் ஆசிரியருமான எங்கள் மதிப்பிற்குரிய ஆசான் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா இன்று காலமானார் என்ற துயரான செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்கின்றோம்.

அவரது பங்களிப்புகள் எங்கள் மனதில் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.வரும் ஓகஸ்ட் மாதத்தில், எங்கள் வகுப்பு தோழர்களுடன் அவரை நேரில் சந்தித்து, ஆசி பெறும் ஆசையுடன் எதிர்நோக்கியிருந்த நாங்கள், இன்று அவரை இழந்த வெறுமையில் நிலைகுலைந்து நிற்கிறோம்.இன்று அவரின் தமிழ் உரைகளும், பாடசாலை நாட்களில் அவர் கற்பித்த தமிழின் நயமும், அவரது குரலோடு எங்கள் மனங்களில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

அவரது அறிவும், கருணையும், நாட்டுப்பற்று நிரம்பிய வாழ்வும் எங்களுக்குத் தாங்க முடியாத இழப்பாகவே திகழ்கின்றன.அன்னாரின் ஆழ்ந்த பணிகள் எப்போதும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும்.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

அவரது குடும்பத்தாருக்கும் நெருங்கிய உறவினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

-நவஜீவன் அனந்தராஜ்- 
புதியது பழையவை